ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அதிக பலன் கிடைக்க சாமி கும்பிடும்போது இதை பாலே செய்யுங்கள்..!

‘ஆன்மீகம்’ நம்மை நமக்கே உணரவைக்கும் அற்புதங்களில் ஒன்று. சிலர் சதா சர்வநேரமும் இறைவழிபாட்டில் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்கள் பணிநெருக்கடிக்கு மத்தியில் கடவுளை தவறாது நினைப்பவர்கள். நீங்கள் இதில் எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்கான பதிவு இது.

நாம் தினசரி கடவுளை நினைப்பது, சாமி கும்பிடுவது மிகவும் நல்ல விசயம். ஆனால் அதை முறையாகச் செய்கிறோமா? என்பதில்தான் விசயமே இருக்கிறது. சரி சரியாக செய்வது/வணங்குவது என்றால் என்ன? இதையெல்லாம் செய்தாலே போதும். காயத்ரி மந்திரத்தை பயணத்தின் போது சொல்லக் கூடாது, அதை சுத்தமான இடத்தில் மட்டும் தான் ஜெபிக்க வேண்டும்.

கடவுளுக்கு கற்பூரம் காட்டும்போது, கடவுளின் காலுக்கு நான்கு தடவை காட்ட வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவையும், முழு உருவகத்துக்கு மூன்று முறையும் காட்ட வேண்டும். கோயிலுக்கு போகும் பலன் எப்போது கிடைக்கும் தெரியுமா? நம் வீட்டில் விளக்கு ஏற்றியும், வாசலில் கோலம் போட்டும் செல்லும் போதுதான்!

விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது, திரியை நகர்த்தி வைப்பதற்காக விரலை தேய்த்து அந்த எண்ணையை தலையில் தேய்க்க கூடாது. சிவனுக்கு அர்ச்சனைக்கு வில்வ இலையும், விஷ்ணுவிற்கு துளசி இலையும் உலகந்தது. இதேபோல் பிள்ளையாருக்கு அருகம்புல், பிரம்மாவிற்கு அத்தி இலை இவற்றை மாற்றி மற்ற தெய்வங்களுக்கு வைத்து வணங்கக் கூடாது.

இதேபோல் கோயிலில் நடக்கும் கலசபூஜை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். கலசத்தை சரீரம் என்கிறோம். அதன் மேல் சுற்றி இருக்கும் நூல் தான் நம் உடம்பில் இருக்கும் நாடி, நரம்புகள். கலசத்தின் உள்ளே இருக்கும் தீர்த்தம்தான் இரத்தம். கலசத்தின் மேலே இருக்கும் தேங்காயை, மனிதனின் தலையாகக் கருத வேண்டும். அந்த தேங்காயை சுற்றிலும் இருக்கும் மாவிலையை சுவாசம் என்கிறோம். கலசத்தின் அடியில் இருக்கும் அரிசியும், இலையும் தான் மூலாதாரம். அதில் இருக்கும் கூர்ச்சமே மூச்சு. உபகரத்தை பஞ்ச பூதமாக வழிபடுகிறோம்.

ஆன்மீக அன்பர்கள் பலரும் அமாவாசைக்கு விரதம் இருப்பார்கள். அன்றைக்கு நிச்சயம் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். வெளியே சமைத்ததை சாப்பிடக் கூடாது. அன்றைய நாளில் பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது இன்னும் நல்லது. அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவதையும் தவிர்க்க வேண்டும். பூஜைக்கு பயன்படுத்திய தேங்காயை சமையலில் சேர்த்து, அதையே சாமிக்கு நிவேதனமாக வைப்பது பெரிய தவறு.

வேண்டுதல் என்னும் பெயரில் கோயிலில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யக் கூடாது. இதையெல்லாம் ஏற்கனவே பின்பற்றி வந்தால் நீங்களும் பெர்பெக்டபிள் பக்தர் தான்!

You may have missed